முன்னுரை

இத்தொடரை முற்றிலுமாக பெண்களுக்காக ” எல்லா புகழும் இறைவனுக்கே “ என்று கூறி ” அனுபவங்கள் ” என்ற தலைப்பில் ஆரம்பிக்கின்றேன். நான் கூற போகும் அனுபவங்கள் என்னுடையது மட்டுமல்ல நான் சந்தித்த நபர்களின் அனுபவங்கள், நான் கேள்விபட்ட அனுபவங்கள் மற்றும் நான் படித்து அறிந்த அனுபவங்களின் தொகுப்பை நான் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

அம்பெய்யும் வேடவன் அண்மையில் அம்பிருந்தும் வான் பறவைக்கு குறி வைத்து எய்ய மறந்து வான் நிலவுக்கு குறி வைப்பின் அவனின் இழப்பு அம்பல்ல – என்றுமே தளர்ச்சியுறா அவனின் மனம்தான்.

நான் மேற்குறிப்பிட்ட அந்த வேடவனைப் போலதான் ஒவ்வொரு பெண்ணின் இழப்பும். அதனால்தான் பெண்களின் மனதை பக்குவப்படுத்தும் நோக்கத்தோடு இந்த தொடரை தொடருகின்றேன். மனிதர்கள் பலவீனமானவர்கள் அதிலும் பெண்கள் மிகவும் பலவீனமானவர்கள், மிகவும் மென்மையானவர்கள், பாராட்ட சீராட்ட தெரிந்தவர்கள், பழிச்சொல்லை சுமப்பவர்கள், பிறருக்காக பாவச்செயலிலும் ஈடுபடுபவர்கள், சந்தோஷங்கள் தன்னைச் சுற்றி இருந்தாலும் அனுபவிக்கத் தெரியாதவர்கள், பசியை மறப்பவர்கள், பாசத்தை பகிர்ந்துவிட்டு பனித்துளியை போல் மறைந்து போபவர்கள், ஆறறிவு கொண்டும் தன்னிலையை எண்ணாது தரணியில் வாழும் மனித இனப் பொக்கிஷங்கள். இப்பேர்ப்பட்ட பெண்களின் மனங்களையும் இதற்கு மாறுபட்டு வாழும் பெண்களின் மனங்களையும் பக்குவப்படுத்த முயல்வதே என்னுடைய நோக்கம். இதற்கு உங்களின் அனைவரின் ஆதரவும் மற்றும் உங்களுடைய மேலான கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published.

19 − 5 =